ராணிப்பேட்டையில் பரபரப்பு எம்.ஜி.ஆர். சிலை உடைப்பு

ராணிப்பேட்டையில் எம்.ஜி.ஆர். சிலை உடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எம்.ஜி.ஆர். சிலை உடைப்பு

ராணிப்பேட்டை மாந்தாங்கல் மோட்டூரில் எம்.ஜி.ஆர். சிலை உள்ளது. இந்த சிலை ஜெயலலிதாவின் 47–வது பிறந்த நாள் விழாவையொட்டி அமைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை எம்.ஜி.ஆர். சிலையின் கால் பகுதியில் சேதப்படுத்தப்பட்டு உடைந்து கிடந்தது. இதை பார்த்த அப்பகுதி அ.தி.மு.க.வினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுகுறித்து கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுபற்றி தகவலறிந்ததும் முன்னாள் அமைச்சர் முகம்மதுஜான் எம்.எல்.ஏ., வாலாஜா ஒன்றிய செயலாளர் எம்.சி.பூங்காவனம், தொகுதி செயலாளர் முனுசாமி, நகர செயலாளர் ஜே.பி.சேகர் மற்றும் நிர்வாகிகள் நேரில் வந்து பார்வையிட்டனர். சிலை சேதப்படுத்தப்பட்டதை பார்வையிட்ட பொதுமக்கள் நேற்று இரவு கூட சிலை நன்றாக இருந்தது என கூறிக்கொண்டனர்.

போலீசில் புகார்

இதுதொடர்பாக ராணிப்பேட்டை நகர செயலாளர் ஜே.பி.சேகர் ராணிப்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதைத்தொடர்ந்து சேதப்படுத்தப்பட்ட சிலையை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இன்னும் சில நாட்களில் மாந்தாங்கல் மோட்டூரை அடுத்த சமத்துவபுரம் எதிரில் நடைபெறும் பிரசார கூட்டத்திற்கு முதல் –அமைச்சர் ஜெயலலிதா வர உள்ள நிலையில் எம்.ஜி.ஆர். சிலை சேதப்படுத்தப்பட்டு இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

280 total views, 1 views today

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Comments are closed.